Sunday, June 25, 2023

மீண்டு(ம்) வருவேன்!

தினந்தோறும் என்னை புதுப்பித்துக்

கொள்கிறேன் எனக்காக அல்லவே!

நான் எப்போது வீழ்வேன் என்று

ஏங்கிக் கிடக்கும் விஷமிகளுக்காக!

நான் இன்னும் வீழ்ந்திடவில்லை என்று

நம்பிக்கையூட்டும் நலம் விரும்பிகளுக்காக!

வஞ்சத்தாலும் துரோகத்தாலும் சற்று 

இடரித்தான் விழுந்து கிடக்கிறேனே தவிர

மண்ணில் புதையுண்டு விடவில்லை!

தைரியமும் மனதிடமும் உற்சாகமாய்

தலைதூக்கிப் பார்க்கிறது புதுப்பிக்கப்பட்ட 

என் முகத்தை நிழல் பிம்பமாகக் காணும்போது!

மீண்டு வருவேன் உங்கள் எல்லோர் முன்பும்

விருட்சமாக வளர்ந்து மீண்டும் வாழ்ந்திடுவேன்!

Friday, June 23, 2023

நம்பிக்கை Vs துரோகம்

நம்பிக்கை - இனி நடக்கப் போகும் 

அனைத்திற்கும் நெஞ்சுரம் பெருக்கும்!

துரோகம் - இன்று வரை நடந்தவை 

யாவிற்கும் ஆழ்மனதின் வேரைப் பிளக்கும்!

நம்பிக்கை தைரியம் கற்றுத் தரும்!

துரோகம் கண்ணீர் வரவழைக்கும்!

ஆறாத வடுவாக நெஞ்சில் நிலைத்தாலும்

இதயத்தை இரு கூறாக்கும் வேதனையை 

மீண்டும் மீண்டும் அனுபவித்தாலும்

துரோகம் தந்த வலிகள் யாவும்

படிப்பினைகளாய் பதிந்து நிற்கும்!

என்றாவது ஒருநாள் நிலைமை மாறும்

நம் வாழ்வில் இதுவும் கடந்து போகும்

என்ற திண்ணமே நம்பிக்கை அன்றோ!

வாழ்க்கைச் சொர்க்கம்!

விதியென இணைந்து

நம் மனதளவில் மட்டும்

முக்கியமென நினைத்திட்ட

ஒருவருடன் ஒன்றாய்

வாழ்ந்தால் மட்டும்தான் நம் 

வாழ்க்கை அழகாகும் என்றில்லை!

நம்மையும் பூரண

மனதோடு விரும்பி

நமது மன ஓட்டங்களையும்

முழுமையாக புரிந்துகொண்டு

நாமே முக்கியமென்று நினைத்து

நமது ஆசைகள் யாவற்றையும்

நிறைவேற்ற முயற்சிக்கும் 

ஒருத்தர் கூட வாழும்பொழுதே

வாழ்க்கை சொர்க்கம் ஆகிடாதோ!

Thursday, June 22, 2023

சுயமரியாதை Vs அன்பு!

கூடியிருந்தவர்கள் விலகும் போது

சுயமரியாதை வென்றால் அன்பு ஒழியும்!

பிரிந்தவர்கள் மீண்டும் கூடும் போது

அன்பு மேலோங்கினால் சுயமரியாதை தோற்கும்!

சுயமரியாதை நம்மை மட்டும் சார்ந்தது

எந்த உறவையும் அறுக்கத் தயங்காது!

அன்பு நம்மையும் சுற்றத்தையும் சார்ந்தது

இழந்த உறவையும் பிரிந்திட நினைக்காது!

சுயமரியாதை நம்மைத் தனிமைப்படுத்தும்!

அன்பு நம்மை கூட்டத்தோடு இணைக்கும்!

சுயமரியாதையை சற்றே விட்டுக் கொடுத்தால்

அன்பு நம்மை ஆரத்தழுவி அரவணைக்கும்!

Wednesday, November 18, 2020

​என் அம்மாவுக்கு!!

உயிர் வாங்கி

உருவம் கொடுத்து

நிலம் தவழ

விட்டவளுக்கு இதோ

நன்றி மடல்..

கருத்தரித்த நாள்முதல்

பாதம் நோகாமல்

நடை பழகினாய்;

விருப்ப உணவேயெனினும்

எனக்கு ஒவ்வாதென்று

வெறுத்து ஒதுக்கினாய்;

எனை ஊட்டமாக்கவே

தினமும் உண்ணவும்

பருகவும் செய்திட்டாய்;

நாற்பது வாரங்கள்

பதமாய் பாதுகாத்து

உயிர்நோகும் வலிபொறுத்து

எனை ஈன்றேடுத்தாய்;

உன் நெஞ்சுக் கதகதப்பில்

எனை அரவணைத்து

இதயத்துடிப்பில் ரீங்காரமிட்டு

என் அழுகையின்

அர்த்தம் அறிந்து

சீராய்த் தாலாட்டுப்பாடி

பாலூட்டி மகிழ்பவளே;

முதலிரு திங்களும்

உந்தன் மடியிலும்

கூரப்பட்டுத் தூளியிலும்

உறங்கும் எனை

முத்தமிட்டு மகிழ்வாய்;

பகல் வேளையிலும்

உறங்கிக் கிடக்கும்

என்பால் கவனமாய்

கணப்பொழுதும் கண்ணிமைக்காது

நானாய் விழிதிறக்க

ஏங்கித் தவிப்பாய்;

ஒளிமட்டும் உணரும்

என்னிடம் உறவினர்கள்

குரலிட்டு நகைப்பர்;

என்னோடு கொஞ்சு

தமிழ் மழலைப்

பேசி புன்னகைப்பாய்;

குப்புறப்படுக்கவும் தவழவும்

பிஞ்சுவிரல் பிடித்து

நடை பழக்கிவிட்டு

மழலையைத் திருத்தி

ஆசையாய்க் கைதட்டி

உற்சாக மூட்டுவாய்;

உடல் நோவுகொண்டால்

வருந்திக் கண்கலங்குவாய்;

பள்ளிச் செல்லும்

பாலகன் எனக்கு

சத்தோடு சுவையாயும்

உணவு அளித்திடுவாய்;

கண்டிப்போடு பாசமும்

பகிர்ந்தளித்து விளையாட்டு

பிள்ளை எனை

பயிலச் செய்திடுவாய்;

பள்ளிதனில் முதல்

மாணவனாய்த் தேர்வுரும்

எனக்குப் பரிசுதந்து

நெஞ்சணைத்து முத்தமிடுவாய்;

வாலிபனான பின்னும்

நல்லதொரு தோழியாய்ப்

பழகி என்னுள்ள

உணர்வு அறிந்திடுவாய்;

பணியமர்ந்த பின்னும்

பாலகன்போல் பாவித்துஎன்

தேவைகள் யாவையும்

நிவர்த்தி செய்திடுவாய்;

உனைப்போல் எனைக்

கண்ணுங்கருத்துமாய் கவனித்துப்

பாசம் பொழிந்திட

கன்னிகை ஒருத்தியை

மணமுடித்து ஆசிர்வதிப்பாய்;

அழகான புரிதலில்

மருமகளாயினும் மகளென

அன்பாய் பழகிட்டு

எனது விருப்பு

வெறுப்புகளைப் பகிர்ந்திடுவாய்;

கருத்தரித்த நாள்கொண்டு

நீவீர் அடைந்த

பேறுகால நிந்தனைகளை

தைரியமாய் அணுக

ஆறுதல் உரைத்து

உன் கைதேர்ந்த

அனுபவத்தால் செம்மையாய்க்

கவனித்து உபசரிப்பாய்;

எமை ஈன்றெடுத்த

பொழுது கொண்ட

களிப்பைவிட எம்பிள்ளை

பிறந்திட பெருமகிழ்ச்சி

அடைந்திட்டு புன்முறுவலிடுவாய்;

மீண்டும் ஒரு

அரவணைக்கும் அன்னை

அத்தியாயம் தொடங்கிற்று!!

உனக்கான தாய்மை

பீடத்தை உனது

வாழ்நாள் முழுதும்

இன்முகத்தோடு ஏற்றிடுவாய்;

இம்மையில் உனையெம்

அன்னையாய்ப் பெற்றிட

அருந்தவம் செய்தேனோ??

உயிரே உன்னைப் பிடிக்கும்!!!

நெற்றியில் சுருக்கம் பிடிக்கும்;

சுருக்கத்தின் மத்தியில் சிறுபொட்டு பிடிக்கும்;

கண்ணின் கருவிழி பிடிக்கும்;

கருவிழி காத்திடும் இமையிரண்டு பிடிக்கும்;

முகத்தில் சிறுமூக்கு பிடிக்கும்;

மூக்குமேல் மின்னலாய் கல்மூக்குத்தி பிடிக்கும்;

செவ்விதழ் போலிரு உதடுகள் பிடிக்கும்;

உதட்டின் ஓவியமாய் சிறுவெடிப்பு பிடிக்கும்;

குயில்போல் குரல் பிடிக்கும்;

குரலில் கேட்கும் செந்தமிழ் பிடிக்கும்;

சங்குபோல் கழுத்து பிடிக்கும்;

கழுத்தில் காவியமாய் கருமணி பிடிக்கும்;

இடையைத் தொடுகின்ற கூந்தல் பிடிக்கும்;

கூந்தலின்று வீசும் நறுமணம் பிடிக்கும்;

சினத்தில் சிவக்கும் கன்னம் பிடிக்கும்;

கன்னத்தில் விழும் சிறுகுழி பிடிக்கும்;

மென்னிய விரல்கள் பிடிக்கும்;

விரல்கள் தீண்டுகையில் ரசிக்கப் பிடிக்கும்;

வாழைபோல் கால்கள் பிடிக்கும்;

கால்களைத் தழுவும் சிறுகொலுசு பிடிக்கும்;

அன்னமதை ஒத்த மெல்லிடை பிடிக்கும்;

இடையைத் தழுவும் உடைகள் பிடிக்கும்;

நெற்றிமேல் வகிடு பிடிக்கும்;

வகிடு மறைக்கும் நெற்றிச்சுட்டி பிடிக்கும்;

வளைந்த செவிகள் பிடிக்கும்;

செவிகள் தாங்கும் ஜிமிக்கி பிடிக்கும்;

முத்துபோல் பற்கள் பிடிக்கும்;

பற்கள் சிந்தும் சிறுபுன்னகை பிடிக்கும்;

நித்திரையில் கனவு பிடிக்கும்;

கனவு கலைக்கும் உன்னினைவுகள் பிடிக்கும்;

கோபத்தில் மௌனம் பிடிக்கும்;

மௌனம் கலைக்கும் புன்சிரிப்பு பிடிக்கும்;

உன்னிழலாய் நானிருந்திட பிடிக்கும்;

உயிரே உன்னை ரொம்பப் பிடிக்கும்!!!

என்னவளாகின்றவளுக்கு/ என்னவனாகின்றவனுக்கு!!!

விடியலில் உன் விழிகளின்

ஊடாய் வையம் காண ஆசை;

கொஞ்சுதமிழ் பேசுகையில் உன் சொற்களின்

ஊடாய் பற்று உணர்ந்திட ஆசை;

பழகுகையில் உன் அரவணைப்பின்

ஊடாய் தாயன்பு பெற்றிட ஆசை;


பகற்பொழுதில்...

கள்ளமில்லா பிஞ்சுமொழி பேசும்

சிறுபிள்ளை போல் குறிப்பறிந்து

சேவை செய்திட ஆசை;

பருத்தி மெண்கரம் பற்றி

காலம் பார்க்காமல்

வெகுதூரம் நடந்திட ஆசை;

உச்சிக் கதிரவன் வறுத்தெடுக்க

அயர்ந்த உனை என் தோளில்

சாய்த்து இளைபாற்ற ஆசை;

சோர்வுக்கு ஆறுதலாய்

உன் மடியில் தலை

வைத்து உறங்கிட ஆசை;

செல்லப் பெயர் வைத்து


உன் கன்னம் கிள்ளி

பாசமாய்க் கொஞ்சிட ஆசை;

பக்குவமாய்ச் செய்திட்ட விருப்ப

உண்டி ஊட்டிடும் வேளையில்

பிஞ்சுவிரல் கடித்திட ஆசை;

யாருமில்லா பாதையில்

பயணத்தின் ஊடாய் பின்னமர்ந்து

இறுக்கமாய் பற்றிக்கொள்ள ஆசை!!


அந்திப்பொழுதில்...

அழகாய் உடையமர்த்தி

அம்சமாய் அலங்கரித்து

ஆலயம் சென்று வர ஆசை;

உனக்காய் நானும்

எனக்காய் நீயும்

இறையைப் பிரார்த்திக்க ஆசை;

ஆலயத்தினுள்ளே பிறை நெற்றி

நடுவே சிறுகீற்றாய் செந்தூரம்

இட்டுப் பார்த்திட ஆசை;

கடற்கரையில் பாதம் பதித்து

இணக்கமாய் உன் விரல் பிடித்து

சில்லென காற்று வீசுகையில்

மனம் விட்டு உரையாட ஆசை;

சிறு வெளிச்சமதனின் சாலையோர


உணவு விடுதியில் அருமையான

சிற்றுண்டி சுவைத்திட ஆசை;

சுவைப்பினிடையே சிறுசிறு

துணுக்குச் சொல்லி நகைக்குமுன்

கன்னக்குழி ரசித்திட ஆசை!!


இரவுப்பொழுதில்...

தலை கோய்து, நகம் கிள்ளி

ஆனந்தமாய் அன்பைப் பரிமாற

நிலவு புலரும் நேரமிது;

அயர்ச்சியால் என் மார்பில்

சிரம் வைத்துறங்கும்

உனை தாலாட்டிட ஆசை;

குழந்தை போல் இருவரும்

அன்புமொழி பேசியபின் ஈருடல்

ஓருயிராய் சேர்ந்துறங்க ஆசை;

மெல்லமாய் உறக்கத்திநிடையே

ஒருவரை ஒருவர் அறியாமல்

அழகு முகம் ரசித்திட ஆசை;

படிய வாரிய கார்மேக

கேசம் கலைந்திருக்க

சரிசெய்து முத்தமிட ஆசை;

கனவு தரும் அச்சம் போக்க

நெஞ்சு சூட்டில் இதம் காண


ஏதுமறியா மழலையாய்

எனை கட்டிக்கொள்ள ஆசை!!


நிலவே உனை நீங்காமல்

உயிர் பிரியும் அந்நொடி வரை

உன் அன்புக் கடலில்

மூழ்கித் திளைத்திட ஆசை;

உயிரே உனை நான் உருகி உருகி

காதல் செய்ய ஆசை!!!