விடியலில் உன் விழிகளின்
ஊடாய் வையம் காண ஆசை;
கொஞ்சுதமிழ் பேசுகையில் உன் சொற்களின்
ஊடாய் பற்று உணர்ந்திட ஆசை;
பழகுகையில் உன் அரவணைப்பின்
ஊடாய் தாயன்பு பெற்றிட ஆசை;
பகற்பொழுதில்...
கள்ளமில்லா பிஞ்சுமொழி பேசும்
சிறுபிள்ளை போல் குறிப்பறிந்து
சேவை செய்திட ஆசை;
பருத்தி மெண்கரம் பற்றி
காலம் பார்க்காமல்
வெகுதூரம் நடந்திட ஆசை;
உச்சிக் கதிரவன் வறுத்தெடுக்க
அயர்ந்த உனை என் தோளில்
சாய்த்து இளைபாற்ற ஆசை;
சோர்வுக்கு ஆறுதலாய்
உன் மடியில் தலை
வைத்து உறங்கிட ஆசை;
செல்லப் பெயர் வைத்து
உன் கன்னம் கிள்ளி
பாசமாய்க் கொஞ்சிட ஆசை;
பக்குவமாய்ச் செய்திட்ட விருப்ப
உண்டி ஊட்டிடும் வேளையில்
பிஞ்சுவிரல் கடித்திட ஆசை;
யாருமில்லா பாதையில்
பயணத்தின் ஊடாய் பின்னமர்ந்து
இறுக்கமாய் பற்றிக்கொள்ள ஆசை!!
அந்திப்பொழுதில்...
அழகாய் உடையமர்த்தி
அம்சமாய் அலங்கரித்து
ஆலயம் சென்று வர ஆசை;
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
இறையைப் பிரார்த்திக்க ஆசை;
ஆலயத்தினுள்ளே பிறை நெற்றி
நடுவே சிறுகீற்றாய் செந்தூரம்
இட்டுப் பார்த்திட ஆசை;
கடற்கரையில் பாதம் பதித்து
இணக்கமாய் உன் விரல் பிடித்து
சில்லென காற்று வீசுகையில்
மனம் விட்டு உரையாட ஆசை;
சிறு வெளிச்சமதனின் சாலையோர
உணவு விடுதியில் அருமையான
சிற்றுண்டி சுவைத்திட ஆசை;
சுவைப்பினிடையே சிறுசிறு
துணுக்குச் சொல்லி நகைக்குமுன்
கன்னக்குழி ரசித்திட ஆசை!!
இரவுப்பொழுதில்...
தலை கோய்து, நகம் கிள்ளி
ஆனந்தமாய் அன்பைப் பரிமாற
நிலவு புலரும் நேரமிது;
அயர்ச்சியால் என் மார்பில்
சிரம் வைத்துறங்கும்
உனை தாலாட்டிட ஆசை;
குழந்தை போல் இருவரும்
அன்புமொழி பேசியபின் ஈருடல்
ஓருயிராய் சேர்ந்துறங்க ஆசை;
மெல்லமாய் உறக்கத்திநிடையே
ஒருவரை ஒருவர் அறியாமல்
அழகு முகம் ரசித்திட ஆசை;
படிய வாரிய கார்மேக
கேசம் கலைந்திருக்க
சரிசெய்து முத்தமிட ஆசை;
கனவு தரும் அச்சம் போக்க
நெஞ்சு சூட்டில் இதம் காண
ஏதுமறியா மழலையாய்
எனை கட்டிக்கொள்ள ஆசை!!
நிலவே உனை நீங்காமல்
உயிர் பிரியும் அந்நொடி வரை
உன் அன்புக் கடலில்
மூழ்கித் திளைத்திட ஆசை;
உயிரே உனை நான் உருகி உருகி
காதல் செய்ய ஆசை!!!
No comments:
Post a Comment