உயிர் வாங்கி
உருவம் கொடுத்து
நிலம் தவழ
விட்டவளுக்கு இதோ
நன்றி மடல்..
கருத்தரித்த நாள்முதல்
பாதம் நோகாமல்
நடை பழகினாய்;
விருப்ப உணவேயெனினும்
எனக்கு ஒவ்வாதென்று
வெறுத்து ஒதுக்கினாய்;
எனை ஊட்டமாக்கவே
தினமும் உண்ணவும்
பருகவும் செய்திட்டாய்;
நாற்பது வாரங்கள்
பதமாய் பாதுகாத்து
உயிர்நோகும் வலிபொறுத்து
எனை ஈன்றேடுத்தாய்;
உன் நெஞ்சுக் கதகதப்பில்
எனை அரவணைத்து
இதயத்துடிப்பில் ரீங்காரமிட்டு
என் அழுகையின்
அர்த்தம் அறிந்து
சீராய்த் தாலாட்டுப்பாடி
பாலூட்டி மகிழ்பவளே;
முதலிரு திங்களும்
உந்தன் மடியிலும்
கூரப்பட்டுத் தூளியிலும்
உறங்கும் எனை
முத்தமிட்டு மகிழ்வாய்;
பகல் வேளையிலும்
உறங்கிக் கிடக்கும்
என்பால் கவனமாய்
கணப்பொழுதும் கண்ணிமைக்காது
நானாய் விழிதிறக்க
ஏங்கித் தவிப்பாய்;
ஒளிமட்டும் உணரும்
என்னிடம் உறவினர்கள்
குரலிட்டு நகைப்பர்;
என்னோடு கொஞ்சு
தமிழ் மழலைப்
பேசி புன்னகைப்பாய்;
குப்புறப்படுக்கவும் தவழவும்
பிஞ்சுவிரல் பிடித்து
நடை பழக்கிவிட்டு
மழலையைத் திருத்தி
ஆசையாய்க் கைதட்டி
உற்சாக மூட்டுவாய்;
உடல் நோவுகொண்டால்
வருந்திக் கண்கலங்குவாய்;
பள்ளிச் செல்லும்
பாலகன் எனக்கு
சத்தோடு சுவையாயும்
உணவு அளித்திடுவாய்;
கண்டிப்போடு பாசமும்
பகிர்ந்தளித்து விளையாட்டு
பிள்ளை எனை
பயிலச் செய்திடுவாய்;
பள்ளிதனில் முதல்
மாணவனாய்த் தேர்வுரும்
எனக்குப் பரிசுதந்து
நெஞ்சணைத்து முத்தமிடுவாய்;
வாலிபனான பின்னும்
நல்லதொரு தோழியாய்ப்
பழகி என்னுள்ள
உணர்வு அறிந்திடுவாய்;
பணியமர்ந்த பின்னும்
பாலகன்போல் பாவித்துஎன்
தேவைகள் யாவையும்
நிவர்த்தி செய்திடுவாய்;
உனைப்போல் எனைக்
கண்ணுங்கருத்துமாய் கவனித்துப்
பாசம் பொழிந்திட
கன்னிகை ஒருத்தியை
மணமுடித்து ஆசிர்வதிப்பாய்;
அழகான புரிதலில்
மருமகளாயினும் மகளென
அன்பாய் பழகிட்டு
எனது விருப்பு
வெறுப்புகளைப் பகிர்ந்திடுவாய்;
கருத்தரித்த நாள்கொண்டு
நீவீர் அடைந்த
பேறுகால நிந்தனைகளை
தைரியமாய் அணுக
ஆறுதல் உரைத்து
உன் கைதேர்ந்த
அனுபவத்தால் செம்மையாய்க்
கவனித்து உபசரிப்பாய்;
எமை ஈன்றெடுத்த
பொழுது கொண்ட
களிப்பைவிட எம்பிள்ளை
பிறந்திட பெருமகிழ்ச்சி
அடைந்திட்டு புன்முறுவலிடுவாய்;
மீண்டும் ஒரு
அரவணைக்கும் அன்னை
அத்தியாயம் தொடங்கிற்று!!
உனக்கான தாய்மை
பீடத்தை உனது
வாழ்நாள் முழுதும்
இன்முகத்தோடு ஏற்றிடுவாய்;
இம்மையில் உனையெம்
அன்னையாய்ப் பெற்றிட
அருந்தவம் செய்தேனோ??