உணர்வுகளால் வேரிட்டு
நினைவுகளால் நிறைத்து
உதடுகளால் உளம் அறுத்தாய்!!
அன்பினால் உறவுகளைப்
பெற நினைத்த என்னை
பொறாமையெனும் தீப்பிழம்பில்
மனம் எரியச் செய்தாய்;
பாசசங்கிலியில் இணைத்து
கூட்டுக்குருவிகளாய் வாழ
நினைத்த எனக்கு
தனிமையே நிம்மதியெனும்
தாரக மந்திரம் போதித்தாய்;
உலகமே அமைதிக்காய்
போராடும் வேளையில்
நான்மட்டும் போர்க்கொடி
உயர்த்துகிறேன் உனக்கெதிராய்;
உன்னுடன் உலகைப்
புதிதாய்க் கண்டு ரசிக்க
நினைத்த எனக்கு
உறவினர்களும் அந்நியமாய்ப்
போகச் செய்திட்டாய்;
உன் துன்பங்களுக்கு
கலங்கிட்ட எனது கண்களை
கபடமென்று சொல்லி
அன்பின் வேரறுத்தாய்;
உயிர் பிரியும் வேளையில்
வாழுங்கலையை ஆழ்மனதில்
விதைத்திட்ட என்மீது
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
பிரகடனப் படுத்தினாய்;
உன் நாவினின்று
உதிரும் சொற்களுங்கூட
நெஞ்சம் கிழித்து
குருதி உறையச்செய்யும்
வல்லமை படைத்திட்டாய்;
உணர்வுகளால் வேறிட்டு
நினைவுகளால் நிறைத்து
உதடுகளால் உளம் அறுத்தாய்!
No comments:
Post a Comment